"ஆடி' என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம்
பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான்
தனிமையில் இருப்பதை அறிந்த "ஆடி' என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம்
எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியாவண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி
தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். தன்னை நோக்கி வந்தவள்
பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க
யத்தனித்தபோது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச்
செய்தது. அவள் ஈசனை வணங்கி, ""ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது
படவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள
வேண்டும்'' என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான், ""என் தேவி இல்லாத சமயம்
நீ அவûளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச்
சுவையுடைய மரமாகப் பிறப்பாய்'' என்றார்.
அவள் விமோசனம் கேட்க, ""கவலை வேண்டாம். நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின்
அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும்
வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில்
அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து
மக்களுக்கு நல்லதைச் செய்வாய்'' என்று அருளினார்.
ஆடி என்ற தேவலோகத்துப் பெண்தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக